பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவரின் மனைவி மலேசியாவில் வைத்து நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் மற்றும் “கமாண்டோ சலிந்த” ஆகியோர் அடங்கிய குழு ஒன்று மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குழுவில் “ஹரக் கட்டா”வின் மனைவியும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பொலிஸாருடன் கலந்துரையாடிய பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“கெஹெல்பத்தர பத்மே” மற்றும் “கமாண்டோ சலிந்த” ஆகியோர் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.