அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நியாயமானது அல்ல என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (21) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவியிலிருந்து நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடையும் வரை இவ்வாறானதொரு முடிவை அமைச்சு எடுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த நியமனமானது அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடனேயே வழங்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் மூலம் அவர் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டால் மாத்திரமே அமைச்சு தீர்மானம் எடுக்க முடியும்.
விசாரணை நடக்கும் காலப்பகுதியில் அவரை நீக்கினால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகளின் முடிவில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம்.
கிழக்கு மாகாண மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, வைத்திய அத்தியட்சகரை நீக்கக் கோரி முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தம் முற்றிலும் அநீதியானது என்றே நான் கூறுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
