அம்பாறை மாவட்டம் மற்றும் கல்முனை பகுதிகளில் தற்போதைய வெப்பநிலை மாற்றத்தால், பொதுமக்கள் அதிகளவில் குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கி வருகின்றனர்.
இதன் விளைவாக, மங்குஸ்தான், ரம்புட்டான், துரியன், கொய்யா போன்ற அரிய மற்றும் மூலிகை மருத்துவ பண்புகள் கொண்ட பழவகைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெறும் ரம்புட்டான் பருவகாலம் காரணமாக, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் ரம்புட்டான் பழங்கள் கிலோவிற்கு ரூபா.250 முதல் ரூபா.300 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
ரூபா.100க்கு 18 முதல் 20 பழங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. மங்குஸ்தான் பழங்கள் ரூபா.300–350 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
மல்வானை மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அம்பாறை மாவட்டத்தில் விற்பனை நடைபெறுகிறது.
மழை குறைவால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தாலும், விலை குறைவடையவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கும் மக்களுக்கான பாதுகாப்பு கவனிப்புகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரம்புட்டான் விதைகள் தொண்டையில் சிக்கி சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மின்சார வேலிகள் பொருத்தப்பட்ட தோட்டங்கள் அருகே மக்கள் சென்றதால், பலர் மின்சாரம் தாக்கி உயிரிழத்தலும் காயமடைதலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறுவர்களுக்கு ரம்புட்டான் கொடுக்கும் போது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.