முன்னாள் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மிகவும் பிரபலமான மகனான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, லிபியாவில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
53 வயதான சைஃப் அல்-இஸ்லாம் கடாபியின் மரணம் குறித்து அவரது வழக்கறிஞர் காலித் அல்-சைதி மற்றும் அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தனித்தனி முகநூல் பதிவுகளில் அறிவித்தனர். இருப்பினும், மேலதிக விவரங்கள் எதையும் அவர்கள் வழங்கவில்லை.
லிபிய தலைநகர் திரிப்போலிக்கு தென்மேற்கே சுமார் 136 கிமீ (85 மைல்) தொலைவில் உள்ள ஸிந்தான் (Zintan) நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து, ஆயுதமேந்திய நபர்கள் கடாபியைக் கொன்றதாக அப்துல்லா ஒத்மானை மேற்கோள் காட்டி ‘ஃபவாசெல் மீடியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடாபியின் அரசியல் குழு பின்னர் வெளியிட்ட அறிக்கையில், “நான்கு முகமூடி அணிந்த நபர்கள்” அவரது வீட்டிற்குள் புகுந்து, இந்த “கோழைத்தனமான மற்றும் துரோகத்தனமான படுகொலையை” செய்ததாகக் கூறியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களுடன் அவர் மோதியதாகவும், ஆனால் அவர்கள் செய்த குற்றத்தின் தடயங்களை மறைக்கும் முயற்சியாக வீட்டில் இருந்த பாதுகாப்பு கேமராக்களை அணைத்துவிட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அமைப்பான திரிப்போலியை தளமாகக் கொண்ட உயர் மாநில கவுன்சிலின் முன்னாள் தலைவர் காலித் அல்-மிஷ்ரி, இந்த கொலை குறித்து “அவசரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு” அழைப்பு விடுத்துள்ளார்.
சைஃப் அல்-இஸ்லாம் கடாபி லிபியாவில் எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை. இருப்பினும், 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தனது தந்தையின் வலதுகரமாக அவர் கருதப்பட்டார். 2011 இல் முஅம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதோடு அவரது பல தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
திரிப்போலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பிறகு நாட்டை விட்டு தப்ப முயன்ற சைஃப் அல்-இஸ்லாம், 2011 இல் ஸிந்தானில் பிடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 2017 இல் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட அவர், அன்றிலிருந்து ஸிந்தானிலேயே வசித்து வந்தார்.
1972 ஜூன் மாதம் திரிப்போலியில் பிறந்த இவர், கடாபியின் இரண்டாவது மகன் ஆவார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் (LSE) பயின்றவர் மற்றும் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்.
ஆரம்பத்தில் அவர் ஒரு சீர்திருத்தவாதியாக தன்னை முன்னிறுத்தினார். லிபியாவின் மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு பற்றி பேசினார். மேற்கத்திய நாடுகளுடனான லிபியாவின் உறவை சீரமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
2011 இல் கிளர்ச்சி வெடித்தபோது, அவர் தனது தந்தையின் பக்கம் நின்றார். கிளர்ச்சியாளர்களை “எலிகள்” என்று விமர்சித்த அவர், அரசாங்கம் கடைசி சொட்டு ரத்தம் வரை போராடும் என்று எச்சரித்தார். “லிபியா முழுவதும் அழிக்கப்படும். நாட்டை எப்படி நடத்துவது என்பது குறித்து ஒரு உடன்பாட்டிற்கு வர நமக்கு 40 ஆண்டுகள் தேவைப்படும்” என்று அவர் அப்போது கூறியிருந்தார்.
கடாபி தனது தந்தையின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது சித்திரவதை மற்றும் கடும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்பட்டு வந்தார்.
2021 நவம்பரில், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது 2015 ஆம் ஆண்டு தண்டனையைக் காரணம் காட்டி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த அரசியல் குழப்பங்கள் லிபியாவின் தேர்தல் செயல்முறை முடங்குவதற்கும் காரணமாக அமைந்தன.
2021-ல் அவர் தேர்தலில் போட்டியிட முயன்றபோது எழுந்த சட்டப் போராட்டங்களும், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் லிபியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
அவர் மேல்முறையீடு செய்ய முயன்றபோது, ஆயுதமேந்திய குழுக்கள் நீதிமன்றத்தையே முற்றுகையிட்டன. இந்தத் தொடர் மோதல்கள் லிபியாவின் தேர்தல் செயல்முறை முழுமையாகத் தோல்வியடையவும், நாடு மீண்டும் ஒரு அரசியல் முட்டுக்கட்டைக்குள் சிக்கவும் முக்கியக் காரணமாக அமைந்தன.
2017-ல் விடுதலையானது முதல், படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே அவர் ஸிந்தான் நகரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இறுதியில், அவர் அஞ்சியபடியே ஒரு தாக்குதலில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
அவரது தந்தை 2011-ல் எச்சரித்தது போலவே, லிபியா இன்னும் ஒரு நிலையான தலைமையை நோக்கிய அமைதிப் பாதையைக் கண்டடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Al Jazeera
