பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று (31) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், ஜோஹான் பெர்னாண்டோ நேற்று (30) கைது செய்யப்பட்டார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்தபோது, சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை அவருக்குச் சொந்தமான எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பணச் சலவை மற்றும் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
