மன்னார் சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் தனி நபர் ஒருவரால் எந்த ஒரு அனுமதியும் இன்றி மத சிலை ஒன்று வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சாந்திபுர விளையாட்டு கழகத்தினால் குறித்த மைதானத்தில் சிலை வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நகரசபை தலைவர் குறித்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பு தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் சிலை மாற்றி வைக்கப்பட்டதுடன் உரிய அனுமதி கிடைத்தால் மாத்திரம் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் இடம் பெற்ற மன்னார் நகரசபை அமர்வில் குறித்த சிலை வைத்த விடயம் தொடர்பாக பேசப்பட்ட நிலையில் இரு உறுப்பினர்கள் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி யிருந்தனர்.
ஆனால் அங்குள்ள இளைஞர் கழகம் சிலை வைப்பதற்கு அனுமதிக்க வில்லை எனவும் காந்திபுரத்தில் உள்ள சில பொது அமைப்புகள் மாத்திரம் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு இல்லை என கடிதம் வாங்கியிருப்பதாகவும் எனவே இது ஒரு முரண்பாடான விடயம்.
எனவே உரிய அமைச்சு மற்றும் ஆளுநரிடம் அனுமதிக்கு அனுப்பி பின்னர் அனுமதி வழங்க வேண்டும் என தவிசாளர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னனியில் நேற்றைய தினம் எந்த ஒரு அனுமதியும் இன்றி உரிய தரப்புக்கு அறிவிக்கப்படாமல் மீண்டும் குறித்த சிலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டது..
குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டு கழக பிரதிநிதிகள் மன்னார் நகரசபை தலைவரிடம் வினவியபோது அதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் சபையில் அனுமதி கிடைத்து விட்டதாகவும் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நகரசபை செயலாளரிடம் இளைஞர் கழக உறுப்பினர்கள் வினவியபோது இவ்வாறான சிலைகள் வைப்பதற்கு சபை அனுமதி வழங்கவில்லை என்றும் அவ்வாறு வழங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் விளையாட்டுக்காக மைதானத்தை பயன்படுத்து விளையாட்டுக்கழகம் மற்றும் உரிய அரச நிறுவனங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாது குறித்த சிலை வைக்கப்பட்டுள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
குறித்த சிலை முன்னதாக மாற்றி வைக்கப்பட்ட தனியார் காணியில் இருந்த போது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதே நேரம் குறித்த சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் அதே மத சிலையும் 500 மீற்றர் தூரத்தில் அதே கோவிலும் இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் விளையாடும் மைதானத்தில் ஏன் இந்த செயல்பாடு என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-மன்னார் நிருபர்
