உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | மன்னாரில் காற்றாலை திட்டம் – நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்றைய தினம் (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாளை (29) காலை 10.00 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும்.

குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும். பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும்.

குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும்.

போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கப்படும்.

எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.

வீடியோ

Related posts

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

பதில் நிதியமைச்சராக ஜி.எல்.பீரிஸ்

மஹிந்த   – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா??