சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை வட்டவளை தியகல பொலிஸ் சோதனை சாவடி பகுதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு சிகரெட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி அவிசாவளையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வேன் ஒன்றினை நிறுத்தி சோதனைக்குட்படுத்தியபோது அதில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பெட்டிகளில் 112 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிசாவளையைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் இவரை தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணையின் பின்னர் நாளைய தினம் (03) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
