அரசியல்உள்நாடு

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அமைப்பின் தலைவர் கமுதி பீ. சம்சுதீன் தலைமையில், ராயபுரம் பாரூக் மஹாலில் நேற்று (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் –

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரான முனீரே மில்லத் பேராசிரியர் காதர் மொஹிதீன் அவர்கள் தொடர்பில் அறிந்திருகின்றேன்.

ஆனால் இன்று தான் அவரை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மை சமூகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் புறக்கணிப்பு செய்தது.

குறிப்பாக அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கின்ற போது முஸ்லிம்கள் தொடர்பில் நேரடியாக பேசுவதற்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டன.

அதற்கான காரணம் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான கட்சி இல்லாமல் இருந்ததே, இந்த நிலையில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

எனது பிரதேசமான காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள நூதன சாலை தொடர்பில் இங்கு உரையாற்றிய பலரும் சிலாகித்துப் பேசினர்.

அதனை உருவாக்குவதற்கான பின்னணி வலுவானது. ஒரு சமூகத்தின் அடையாளம் என்பது மிகவும் முக்கியமானது.

குறிப்பாக எமது பிரதேசத்தின் அடிப்படை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த நூதன சாலை இன்று சான்றாக உள்ளது.

இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், அதாவது எமது சமூகத்திற்கு எதிராக வருகின்ற கருத்துக்களை முறியடிக்க நாம் கற்றவர்களாக இருக்க வேண்டும்.

இன்றை துரதிஷ்டம் அதிகமானவர்கள் பணம் சம்பாதிப்பமை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர், அதுவும் இன்றியமையாததொன்று, அதைவிட முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது கல்விக்கு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் மட்டுல்ல இலங்கையிலும் ஏன் சவூதி அரேபியாவிலும் இன்று முன்னுரிமை பொருளாதரத்தை தேடுவது என்ற நிலையினை காணலாம். இலங்கையின் பண்டைய ஆட்சி காலத்தில் அமைச்சரைவையில் முஸ்லிம்கள் இருந்துள்ளனர்.

அவர்கள் தமது உரிமைக்காகவும், மதச் சுதந்திரத்திற்காகவும் போராடினார்கள்,
தங்களது கலாசாரத்தை இழந்த அடிமைப்பட்ட அரசியலுக்கு எதிராக பேசினார்கள், எமது மத உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
எனவே நாம் நெறிப்படுத்தப்பட்ட கலாச்சார விழுமியங்களுடன் எமது நேர்மையான செயற்பாடுகளை ஏனைய சமூகங்களும் பெருமைப்படும் வகையில் விதைப்பது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினை பலப்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்டமைப்பினை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைத்தீன், பொதுச்செயலாளர் கே.ஏ.எம் அபூபக்கர் மற்றும், கமுதி பஷீர் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைத்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன்
கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினையும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்

நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்களின் வாகன பேரணி கொழும்புக்கு

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் – மஹிந்த