2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, பாராளுமன்றம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
2026 ஜனவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 2371/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் 2428/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 3.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2025.12.28 ஆம் திகதி 2468/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தீர்மானம் மீதான விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட காலம் போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது குழுவில் அறிவித்துள்ளனர்.
அத்துடன், அன்றைய தினம் பி.ப. 5.30 மணிக்கு ஒழுங்குப் புத்தக இல. 3 இல் திகதி குறிப்பிடப்படாததாக சேர்க்கப்பட்டுள்ள ‘மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2026 ஜனவரி 7 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து பி.ப. 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 மற்றும் 2452/40 ஆகிய அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
அதனையடுத்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மு.ப. 11.30 மணி முதல் பி.ப 3.00 மணி வரை (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதன் பின்னர் பி.ப. 3.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2465/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்துவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
