தங்களது சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க தவறியதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளைய தினத்திற்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் (27) காலை 8.00 மணிக்கு தொழிற்சங்கப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களை சுகாதாரத் துறைகளில் உள்வாங்கத் தவறியது மற்றும் தற்போதுள்ள சேவை வெற்றிடங்களுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியது உள்ளிட்ட பல பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.