உள்நாடுபிராந்தியம்

தலாவ பஸ் விபத்து – சாரதிக்கு விளக்கமறியல் – நடத்துனருக்கு பிணை

பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவ, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பஸ்ஸின் நடத்துனரை தலா ரூ. 2 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, விபத்தானது பஸ் சாரதியின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் குறிப்பிட்டனர்.

பின்னர் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதவிருந்த நிலையில், அந்தச் சாரதியை காப்பாற்ற முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஜயகங்க நீர்த்தேக்கத்தை நோக்கி பஸ் கவிழ்ந்துவிடாமல் தடுத்தது சாரதியின் திறமை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என்றும் அவர் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்ட அனுபவமுள்ள சாரதி என்பதால் அவரை பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இரு வாதங்களையும் கருத்தில்கொண்ட தம்புத்தேகம நீதவான், சாரதியை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்து, அவரை இம் மாதம் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts

தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி வேண்டி ஹட்டனில் சிறப்பு பூஜை வழிபாடு

editor

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் கோரிக்கை [VIDEO]