உள்நாடுபிராந்தியம்

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதான இருவருக்கும் விளக்கமறியல்

தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதிக்கு முன்பாக இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரி மற்றும் வர்த்தகர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலவத்துகொட பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதிக்கு அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் வர்த்தகர் ஒருவருக்கும் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் நீண்டுச்சென்று ஏற்பட்ட தகராறில், வர்த்தகர் தனது துப்பாக்கியை மதுவரித் திணைக்கள அதிகாரியை நோக்கி காட்டியதாக கூறப்படுகிறது.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், மதுவரித் திணைக்கள அதிகாரி துப்பாக்கியைப் பறித்து, அருகிலுள்ள சுவர் மீது நான்கு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்குச் சென்ற தலங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு, துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரி, விக்ரமசிங்கபுர பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு