தன்னையும் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்களையும் படுகொலை செய்ய கட்சி சதி செய்வதாக கடுமையான குற்றச்சாட்டை ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க, முன்வைத்துள்ளார்.
ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட அவர், தனது அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்கில் ஒரு பதிவில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தன்னைத் தவிர, இந்தப் படுகொலை சதியில் குறிவைக்கப்பட்ட நபர்களில் வருண தீப்தி ராஜபக்க்ஷ மற்றும் பிரியஞ்சித் விதாரண (ரைட் ரலா) ஆகியோரும் உள்ளடங்குவதாக நந்தன குணதிலக்க குறிப்பிடுகிறார்.
கடந்த ஒரு வருடமாக ஜே.வி.பி-க்குள் இருந்த பொய்கள், ஜனநாயக விரோத நடைமுறைகள் மற்றும் தவறான ஒழுக்கநெறிகள் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்டதே இந்தப் படுகொலை முயற்சிக்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த கொலைக் குழுவும் அதன் கூட்டாளிகளும் இப்போதெல்லாம் தன்னைப் பின்தொடர்வதாகவும், இதில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மற்றும் கொலைத் தந்திரங்கள் பற்றிய தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தப் படுகொலைக் குழுவை ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனிப்பட்ட முறையில் வழிநடத்துகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
