தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணைப் பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மதிக்கத்தக்க மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார். இவர் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாவார்.
முறைப்பாட்டில், பாதிக்கப்பட்ட இந்த மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணைப் பொலிஸாருக்கு நேற்று (15) மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடற்தொழில் மேற்கொண்டு வருபவர்; மாணவியின் தாயார் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வருபவராவார்.
கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமையவும், பெரிய நீலாவணைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி. கஜேந்திரனின் வழிகாட்டுதலிலும் குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்
