தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த மனுவை ஜூலை 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களின் அடிப்படையில் இந்த மனு குறித்து விசாரணை நடத்துவது பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆராய்ந்ததில், இந்த விசாரணை கோப்புகள் தற்போது சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவரது மேற்பார்வையின் கீழ் இருப்பதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் தற்போது நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் என்ன என்பது தொடர்பில் அடுத்த முறை நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த மனுவை ஜூலை 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.