பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த மனநிலையில் உள்ளாரா என்பதை நாளை (11) கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி (JMO) மூலம் பரிசோதிக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே அரச சட்டத்தரணி ஒக்ஸ்வேல்ட் பெரேரா இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.
முன்மொழியப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து பரிசீலிப்பதற்காகவே வழக்கு இன்று அழைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு இலக்கம் 08 மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக அரச சட்டத்தரணி ஒக்ஸ்வேல்ட் பெரேரா நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கு விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தகுந்த மனநிலையில் இல்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதற்கமைய, குறித்த பிரதிவாதி வழக்கு விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தகுந்த மனநிலையில் உள்ளாரா என்பதைத் தீர்மானிப்பதற்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக விசேட வைத்திய அறிக்கை ஒன்றைக் கோருவதற்கு உத்தரவிடப்பட்டதாகவும் அரச சட்டத்தரணி ஒக்ஸ்வேல்ட் பெரேரா தெரிவித்தார்.
அந்த நீதிமன்ற உத்தரவின் படி, பிரதிவாதி குறித்த பரிசோதனைக்காக நாளை ஆஜராகவுள்ளதாகவும் அரச சட்டத்தரணி கூறினார்.
குறித்த பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பிரதிவாதி வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த மனநிலையில் உள்ளாரா? என்பது குறித்து முறைப்பாட்டாளர் தரப்பு பரிசீலிக்கும் எனவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதற்கமைய, குறித்த பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறும் அரச சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை, மூன்று வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பில் இட்டதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
