வீடு ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
37 வயது மதிக்கத்தக்க வட்டுக்காய் என செல்லமாக அழைக்கப்படும் இச்சந்தேக நபர் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய செயற்பட்ட சாய்ந்தமருது பொலிஸார் சந்தேக நபர் ஒரு தொகுதி போதைப்பொருளுடன் போதைப்பொருளை அளவீடு செய்யும் தராசு, பொக்கற் செய்யும் பொலித்தீன், கத்திரிக்கோல் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர் .
சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரை மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாய்ந்தமருது பகுதிகளில் அதிகளவான போதைப்பொருள் கடத்தல்கள் சூட்சமமாக இடம்பெற்று வருவதுடன் பொலிஸார் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபரை கைது செய்வதற்கு பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் மேற்பார்வையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பாறுக் ஷிஹான்
