உள்நாடு

சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடி அதிகரிப்பு

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp, Telegram, WeChat போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தக் குற்றங்களால் பிரஜைகள் அதிகளவில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் குற்றங்களைச் செய்ய குற்றவாளிகள் முக்கியமாக இரண்டு முறைகளைப் பயன்படுத்துவதாக அந்த திணைக்களம் குறிப்பிடுகிறது.

முதல் முறை:

முதலில், மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிட்டு, ஒரு வணிகத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முதல் படியாக, இந்த முதலீட்டிற்கு ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யுமாறு குற்றவாளிகள் அறிவிக்கின்றனர்.

பின்னர், அந்த சிறிய தொகையை முதலீடு செய்தவர்களுக்கு சாதாரண இலாபமாக ஒரு தொகையை முதலீட்டுத் தொகையுடன் சேர்த்து வழங்குகின்றனர்.

பல படிகளில், முதலீட்டாளர்களுக்கு இலாபத்தை அதிகரித்து வழங்கி, அவர்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர்.

பின்னர், மேலும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறி பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர்.

இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

பல தடவைகள் இவ்வாறு பெரிய தொகைகளை முதலீடு செய்ய வைத்த பின்னர், முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு இலாபமும் வழங்கப்படுவதில்லை.

முதலீட்டாளர்கள் இலாபம் கிடைக்கவில்லை என சமூக ஊடகங்கள் மூலம் குற்றவாளிகளிடம் விசாரிக்கும்போது, பாதுகாப்பு வரி, சுங்கக் கட்டணம் போன்ற கட்டணங்களைச் செலுத்தினால் மட்டுமே இலாபம் பெற முடியும் எனவும், அதற்கு மேலும் கூடுதல் பணம் செலுத்தினால் இலாபம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு மேலும் மேலும் பணத்தை முதலீடு செய்ய வைக்கின்றனர்.

இரண்டாவது முறை:

மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

இதற்கு இணைந்தவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்று, அவர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் பணத்தை குற்றவாளிகள் குறிப்பிடும் வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவுறுத்துகின்றனர்.

இதற்கு ஈடாக, முதலீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு கமிஷன் தொகையை கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்குவதாகக் கூறுகின்றனர்.

இந்த முறையில், முதல் முறையில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை பல கணக்குகள் மூலம் மாற்றி, பணத்தைச் சுழற்றுவதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

Related posts

நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கத் தீர்மானம் இல்லை

நாளை முதல் சில ரயில் சேவைகள் இரத்து

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்