கென்யாவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரைலா ஒடிங்கா (Raila Odinga) தமது 80 வது வயதில் இன்று (15) உயிரிழந்தார்.
இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தபோது அவர் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடப்படுகின்றது.
ரைலா ஒடிங்காவை அவரது ஆதரவாளர்கள் ‘பாபா’ என்று அன்பாக அழைத்தனர்.
80 வயதான ஒடிங்கா கென்ய அரசியலில் முக்கிய நபராகவும், இந்தியாவின் நீண்டகால நண்பராகவும் இருந்தார்.
ஒடிங்கா மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது அன்பு நண்பரும் கென்யாவின் முன்னாள் பிரதமருமான ரைலா ஒடிங்காவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஒரு உயர்ந்த அரசியல்வாதியாகவும், இந்தியாவின் அன்புக்குரிய நண்பராகவும் இருந்தார்.
குஜராத் முதல்வராக நான் இருந்த நாட்களில் இருந்து அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எங்கள் நட்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இந்தியா, நமது கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் பண்டைய ஞானத்தின் மீது அவருக்கு ஒரு சிறப்புப் பாசம் இருந்தது. இந்தியா-கென்யா உறவுகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இது பிரதிபலித்தது.
குறிப்பாக ஆயுர்வேதம் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள், அவரது மகளின் ஆரோக்கியத்தில் அவற்றின் நேர்மறையான தாக்கத்தைக் கண்ட அவர் அவற்றைப் பாராட்டினார்.
இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கென்யா மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.