அரசியல்உள்நாடு

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை – கீதா குமாரசிங்க

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்து கொள்ள நான் விரும்பவில்லை. சரியான பாதையில் பயணிப்பதற்காக எந்தவொரு தியாகத்துக்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்.  

எனவே இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதில் கவலை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நான் எடுத்த தீர்மானம் எனது சுய உரிமையாகும். எனது 14 வருட அரசியல் வாழ்வில் கட்சி தாவும் அரசியல் மற்றும் அடிமைத்தனமான அரசியலை நான் வெறுக்கின்றேன். எவ்வித சிறப்புரிமைகளையும் பெற்றுக் கொண்டதில்லை. எனவே நான் அரசாங்கத்துக்கு பயமில்லை. 

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறான தீர்மானத்தை எடுத்தால் நாடு பெரும் அழிவை எதிர்கொள்ளும். எனவே மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் அவர்களுக்கு யதார்த்தத்தை உணர்த்த வேண்டியது எனது கடமையாகும். எனக்கு யாரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இது நான் சிந்தித்து எடுத்த தீர்மானமாகும். 

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக நான் வாக்களித்திருக்கின்றேன். ஆனால் அவர் என்னை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்கின்றார். பதவிக்காக ரணிலுக்கு தேவையான தீர்மானத்தை தீர்மானத்தை என்னால் எடுக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. சஜித் வெற்றி பெறுவார் என்பதால் தானே நீங்கள் அங்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கின்றனர். அதுவே உண்மையாகும். 

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்து கொள்ள நான் விரும்பவில்லை.

சரியான பாதையில் பயணிப்பதற்காக எந்தவொரு தியாகத்துக்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். எனவே இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதில் கவலை இல்லை.

அரசியலுக்காகவே நான் சுவிட்ஸர்லாந்து குடியுரிமையையும் இழந்தேன். அதனால் எனக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனினும் அதனை விட நான் மக்களுக்கு சேவையாற்றுவதற்கே முன்னுரிமையளித்தேன் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 124 பேர் கைது

அரச ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு