கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை (Red Alert) மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர மற்றும் மினிபே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன, மத்துரட்ட, ஹங்குரன்கெத மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மூன்றாம் கட்ட வெளியேற்றல் சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஹசாலி ஹேமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை இல்லாத வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
