கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாகக் கூறி கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலை சோதனை செய்தபோது சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (28) அதிகாலை 1.44 மணியளவில் புறப்பட்டு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திற்குள் குண்டுகள் இருப்பதைக் குறிக்கும் மின்னஞ்சல் வந்தது.
நான்கு பயணிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாக விமான நிலையத்தில் உள்ள மின்னணு கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து செய்தி வந்ததை அடுத்து, கட்டுநாயக்க ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
245 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகளை ஏற்றிய விமானம் தரையிறங்கிய பிறகு விமானப்படையின் வெடிகுண்டுப் பிரிவு சோதனை செய்தது.
இதன்போது விமானத்தில் குண்டுகள் அல்லது சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
