இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு அண்மையில் (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது.
அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் நியமனம் பற்றிய பரிந்துரைக்கும் குழு அனுமதி வழங்கியது.
அதற்கமைய, கியூபா குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திரு.ரத்னாயக்க முதியன்சலாகே மஹிந்த தாச ரத்னாயக்க அவர்களின் பெயரையும், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமரசிங்கவின் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் வடஅயர்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனாதீர துமுன்னகே நிமல் உபாலி சேனாதீர அவர்களின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரியவின் பெயரையும் குழு பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரியவின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, குமார ஜயக்கொடி, (கலாநிதி) அனில் ஜயந்த, (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.