ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு பிரதேசத்துக்கும் அரசியல் அதிகாரங்களை வழங்கி அழகு பார்த்துவரும் கட்சியாகும். அந்த வகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் அதிகாரத்தை வழங்கியுள்ளோம் என்று கட்சியின் செயலாளரும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பாலமுனையில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ்.உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் எவ்வாறு பேசவேண்டும் என்பதை நாங்கள் எழுதிக் கொடுப்போம். அதை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பேசும்போது, அழகு பார்த்து சந்தோஷப்படுகின்ற கட்சியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இது மரபு ரீதியாக இருந்து வருகிறது என்பதையும் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
இது தொடர்பில் யாருக்கேனும் சந்தேகம் இருக்குமாக இருந்தால் அவர்கள் என்னிடம் நேரடியாக கேட்க முடியும். நாங்கள் உண்மையைத்தான் சொல்லுகிறோம் என்றார்.
கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய நிசாம் காரியப்பர் தேர்தல் பிரச்சார பொது மேடையில் இவ்வாறு பேசியது தொடர்பில், கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் உள்ளிட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் தங்களின் ஆதங்கங்களை வெளியிட்டு வருவதுடன் நிசாம் காரியப்பர் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
-அபு அலா