ஊடகவியலாளர் திலின ராஜபக்க்ஷவை தூஷித்து தாக்கி, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதன் மூலம், அலவ்வ பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த ஊடகவியலாளர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி சம்பத் அபேகோன் ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இந்த தீர்மானத்தை எடுத்தார்.
அதன்படி, அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக அப்போது அலவ்வ பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட்களாக இருந்த ரவீந்திர குமார, பி.எம்.எஸ்.எஸ். விஜேபண்டார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயசுந்தர ஆகியோர் மனுதாரருக்கு தங்கள் தனிப்பட்ட நிதியிலிருந்து 75,000 ரூபா தொகையை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதிவாதி பொலிஸ் உத்தியோகத்தர்களுன் நடவடிக்கைகள் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.