இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 06ஆம் திகதி இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அமைய இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
இதன் ஊடாக, தேசிய மின்சார மதியுரைப் பேரவைக்குப் பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிக்கின்றது.
மேலும், தொடர்ச்சியான விநியோகம், வினைத்திறனான மற்றும் செலவுச் சிக்கனமான மின்சார விநியோகம், பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு “மொத்தவிற்பனை மின்சாரச் சந்தை” என்பது “தேசிய மின்சாரச் சந்தை” என்று மாற்றப்படுகின்றது.