அரசியல்உள்நாடு

இறக்காமத்தின் வரலாற்றை மாற்றியமைத்து புதிய தவிசாளராக எம்.எல்.முஸ்மி தெரிவு

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.முஸ்மி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பகல் இரண்டு மணிக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தவிசாளர் தெரிவுக்கு அழைத்தபோது,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.முஸ்மி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தாஹா செய்னுதீன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.முஸ்மி 8 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த தாஹா செய்னுதீன் 4 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜா நடு நிலை வகித்தார்.

எம்.எல்.முஸ்மி அவர்களுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும்,சுயேட்சைக்குழு 1 இன் ஒரு உறுப்பினரும், சுயேட்சைக்குழு 2 இன் ஒரு உறுப்பினரும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஒரு உறுப்பினரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக மொத்தமாக 8 பேர் வாக்களித்தனர்.

தாஹா செய்னுதீனுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருமாக மொத்தமாக 4 பேர் வாக்களித்திருந்தனர்.

இதற்கமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.முஸ்மி அவர்கள் 4 மேலதிக வாக்குகளினால் இறக்காமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உதவித் தவிசாளருக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் என்.எம்.ஆசிக், சுயேட்சைக்குழு 1 இன் கே.எல்.சமீம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டபோதிலும் சுயேட்சைக்குழு 1 இன் கே.எல்.சமீம் அவர்கள் சபையில் எழுந்து நின்று, உதவித் தவிசாளர் தெரிவில் தனக்கு அநீதியும், துரோகமும் இழைக்கப்படுவதால் இச்சபையிலிருந்து வெளிநடப்புச் செய்வதாகக்கூறிவிட்டு சபையிலிருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக சபையிலிருந்த உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் உதவித் தவிசாளராக என்.எம்.ஆசீக் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொள்ள ஒரு ஆசனம் தேவைப்பட்டபோது, உதவித் தவிசாளர் பதவியை தமக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் சுடே;சைக்குழு 1 இன் உறுப்பினர் கே.எல்.சமீம் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தவிசாளர் வேட்பாளர் எம்.எல்.முஸ்மிக்கு வாக்களித்திருந்தார்.

இந்நிலையில் சமீமுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் என்.எம்.ஆசிக் உதவித் தவிசாளருக்குப் போட்டியிட்டதனாலேயே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதேச சபை உறுப்பினர் கே;.எல்.சமீம் அவர்கள் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பிழை ஏதும் செய்யவில்லை என்றும் அந்தக்கட்சியின் உறுப்பினர் ஆசிக்தான் தலைவரையும், கட்சியையும் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருந்திட்டபோதிலும், இன்று காலை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீமிடம் இவ்விடயம் தொடர்பில் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் தொலைபேசியில் தெரிவித்ததாகவும், ஹக்கீம் இவ்விடயத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

இதேவேளை, தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவைப் பார்வையிடுவதற்காக பார்வையாளர் கலரியில் வீற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சர் மற்றும் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் சைகை மூலம் தமது கட்சி உறுப்பினர் என்.எம்.ஆசீக் அவர்களை போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு எழுந்து சொன்னபோது, மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள், பார்வையாளர்கள் அமைதியாக இருக்குமாறும் இல்லாவிட்டால் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனவும் அறிவித்தார்.

அதனையடுத்து சபை மிக அமைதியாக இருந்தது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் இக்கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததை இங்கு பலரும் பாராட்டிப் பேசியமை குறிப்பிடத்தக்கதாகும்.

-கே எ ஹமீட்

Related posts

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை – ஹர்ஷ [VIDEO]

E-Passport தொடர்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வெளியிட்ட தகவல்

editor

 2022  ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்