தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒருவரை ஒருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பன்முகத்தன்மை மற்றும் கலாசார மரியாதை பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தின் இருப்பானது, ஒவ்வொரு இனத்தினதும் கலாசார அடையாளங்களை மதிப்பதற்கான அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது.
அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துக்களைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதே இதற்கான அடிப்படையாகும்.
இந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தைப்பொங்கல் விழா நமக்குக் கற்றுத்தரும் பாடத்தை ஆழமாக அறிந்துகொள்வது நமது வாழ்க்கைக்குப் பெரும் பயனளிக்கும்.
இயற்கையுடனான உறவு மற்றும் நன்றியுணர்வு தைப்பொங்கல் விழா நமக்கு நினைவூட்டும் மிக முக்கியமான விடயம் ‘நன்றியுணர்வு’ ஆகும்.
இயற்கைக்கும், சக உயிரினங்களுக்கும் அன்பு, கருணை மற்றும் மரியாதையைச் செலுத்த வேண்டும் என்பதே இவ்விழாவின் தத்துவமாகும்.
தற்போதைய உலகில் நாம் எதிர்கொள்ளும் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மனித மோதல்களுக்கு முக்கிய காரணம், இயற்கையும் மனித மனமும் கடுமையாகச் சிதைவடைந்திருப்பதே ஆகும்.
எனவே, தைப்பொங்கல் கலாசார அம்சங்களின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
கல்வி மற்றும் மத நிறுவனங்களின் பொறுப்பு இந்தத் தருணத்தில், தைப்பொங்கல் விழாவின் தூரநோக்கையும் தத்துவத்தையும் சமூகத்திற்குக் கொண்டு செல்வது நமது பொறுப்பாகும்.
பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்ற அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும், அந்தந்த மத மற்றும் கலாசார நிகழ்வுகள் குறித்த முறையான அறிவை மக்களுக்கு வழங்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய செயற்பாடுகளின் மூலமே பரஸ்பர மதிப்பும், கருணையும் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.
தைப்பொங்கல் விழாவின் உண்மையான பொருளை உணர்ந்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் இத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் மனதாரப் பிரார்த்தித்துள்ளார்.
