நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து ‘பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொன்கோடியா, எஸ்கடேல், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்’ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் அவர் வழங்கி வைத்தார்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நிலவும் கடும் காலநிலை சீர்கேடு காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பலர் தமது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து இடைத்தாங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜீவன் தொண்டமான் மேற்கொண்ட இந்த நிவாரணப் பணியில், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்கள், இ.தொ.கா உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டனர்.
மேலும், இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் வழங்கும் செயற்பாடானது மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர் நாட்களுக்குள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
