அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களின் நிவாரணப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான C-17 விமானம் நேற்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது,
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் இந்த நிவாரணப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) முன்னாள் பணிப்பாளர் (அவசர நடவடிக்கை) ஓய்வு பெற்ற பிறகு தற்போது தன்னார்வலராகப் பணியாற்றி வரும் சுனில் ஜயவீர, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் (அவசர நடவடிக்கை) இந்திக புஷ்பகுமார மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டயனா பெரேரா ஆகியோர் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிக் கட்டமைப்பை புனரமைப்பதற்காக 50 டொன் இரும்பு பேலி பாலங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்காக ஒரு இயந்திரத்திற்கு 20 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட 500 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
