உள்நாடுபிராந்தியம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரியில் வீட்டுத் திட்டம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகெபொல தல்கஸ்கந்த பிரதேசத்தில் கட்டப்பட்ட தம்மாவங்ச நாஹிமி கிராமம் இந்த மாதம் 11 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேற்படி நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகரப்புற அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற உள்ளது.

மேற்படி வீட்டுத் தொகுதியில் உள்ள 24 வீடுகளின் நிர்மாணப் பணிகள் 2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்ட தொகை 6 இலட்சம் ரூபாவாகும்.
அதற்காக அரசாங்கத்தினால் 15 பேச்சஸ் காணி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்மைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீட்டுத் தொகுதியில் உள்ள ஏழு வீட்டு உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபா நிவாரணக் கடனாக இரத்தினபுரி வீட்டுவசதி அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் உதித தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்திய உதவியின் கீழ் கட்டப்பட்ட தம்மாவங்ச நாஹிமி கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தக் கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினர் வசிக்கின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஏனைய வீட்டுத் திட்டங்கள்
இவற்றுடன் மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் தெஹெனகந்த பிரதேசத்தில் 25 வீடுகளை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில், ஒரு வீட்டிற்காக இந்திய அரசாங்கம் செலவிடும் தொகை 28 இலட்சம் ரூபாவாகும்.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக சப்புகஸ்கந்த தோட்டக் காணிகளில் இருந்து தலா 10 பேச்சஸ் காணி வழங்கப்பட்டுள்ளது.

இது குறைந்த வருமானம் பெறும் தோட்டத் தமிழ் சமூகத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஒரு நன்கொடையாகும்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

#சமன்லால்கோகம ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு