இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்கா சென்றுள்ளார்.
அதன்படி, இன்று (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளியுறவுச் செயலாளர் எலிசன் ஹூக்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.