அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது.
வெளியாகியுள்ள தகவலின்படி, நேற்று முன்தினம் (25) இரவு 7.45 மணியளவில், பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டுள்ளது.
விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் பயணித்துள்ளனர். ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது என்றும் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தினால் பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
