சர்வதேச அணுசக்தி முகவரகத்துடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைப்பது குறித்த பாராளுமன்ற உத்தரவை அமுல்படுத்துமாறு அனைத்து நிர்வாக அமைப்புகளுக்கும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் நேற்று உத்தரவிட்டார்.
இந்த முகவரகத்தின் பணிப்பாளர் நாயகம் ரஃபேல் க்ரோசியின் ஈரானுக்கு எதிரான ஒரு சார்புடைய அறிக்கை, ஆளுநர் குழுவின் தீர்மானத்திற்கு வழிவகுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஈரான் மீது போரைத் தொடங்க ஊக்குவித்தது.
அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது குண்டு வீசவும் தூண்டியது.
இந்தப் பின்புலத்தில் சர்வதேச அணுசக்தி முகவரகத்துடனான உறவுகளை நிறுத்தி வைப்பதற்கான மசோதாவை ஈரானிய பாராளுமன்றம் கடந்த ஜூன் 25 ஆம் திகதி நிறைவேற்றியது.
அதனை அரசியலமைப்பு கவுன்சில் உடனடியாக அங்கீகரித்தது.
இம்மசோதாவின் படி, நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அமைதியான அணுசக்தி நடவடிக்கைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், அணுசக்தி முகவரக கண்காணிப்பாளர்கள் ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
அதற்கேற்ப சர்வதேச அணுசக்தி முகவரத்துடனான ஒத்துழைப்பை இடைநிறுத்துவதற்கான சட்டத்திற்கு ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் நேற்று இறுதி ஒப்புதல் அளித்தார்.
-தஸ்னிம் நியூஸ்