அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த இளம் பாடகர் சுகிர்தராஜா சபேசன் இந்திய மண்ணில் ZEE TAMIL தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘ஸரிகமப’ சீஸன் 5 இற்கான பாடல் நிகழ்ச்சியில் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சீதமிழ் ஸரிகமப நிகழ்வில் பாடுவதற்கு தெரிவான முதல் பாடகர் சபேசன் என்பது பெருமைக்குரியது.
தெரிவானபோது மேடையில் உணர்ச்சி வசப்பட்டு அழுதழுது தனது விளக்கத்தை நடுவர்களிடம் வழங்கினார்.
தான் அதிஷ்டமில்லாதவன், பட்டதாரியான பின்னரும் கடந்த ஐந்து வருடங்களாக தொழிலின்றி குடும்பத்தை வழிநடத்த சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இங்கு இப்படி முதல் சுற்றில் ஜெயித்தது வாழ்க்கையில் மறக்க முடியாது. மிகவும் மகிழ்ச்சி. அம்மாவுக்கும் அனைவருக்கும் நன்றிகளைக் கூறினார்.
அவரது தெரிவுக்கு சரமாரியாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அவர் பிறந்த அம்பாறை மாவட்டம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர், தவிசாளர் முதல் பலரும் மனப் பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவர் எமது நாட்டுக்கும் எமது அம்பாறை மாவட்டத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்து வெற்றி நாயகனாக மகுடம் சூட எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் ஆசி வழங்கியுள்ளார்.
இதேவேளை அவர் பிறந்த வினாயகபுரத்தில் பிறந்து இம்முறை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக வரவிருக்கும் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சபேசன்பாடசாலை மற்றும் கிராமத்து கலை நிகழ்வுகளில் தன்னுடைய வசீகரமான குரல் வளத்தால் பல பாடல்களைப் பாடி கிராமத்தவர்களின் பாராட்டைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.