ஈரானின் வளைகுடா கடற்கரை நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று சனிக்கிழமை பலத்த வெடிப்பு ஏற்பட்டது.
எனினும், இந்த வெடிப்பிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹார்மோஸ்கான் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜெனரல் மெஹ்ர்தாத் ஹசன்சாதே கூறுகையில், “வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சை பிரிவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்,” என்றார். தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்பு, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின. இருப்பினும், அத்தகைய தகவல்களை IRGC திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தனியாக நடந்த வேறொரு சம்பவத்தில், தென்மேற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள அஹ்வாஸ் நகரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர். அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. (ArabNews)
