ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வடமேல் மாகாண நிகழ்ச்சித் திட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன ஆகியோரின் தலைமையில் இன்று (26) காலை வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 வரையான இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்புத் தொகை மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் ரூ. 24 மில்லியன் செலவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரை ஆற்றியதோடு நிகழ்வின் நோக்கத்தையும் விளக்கினார்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, நாட்டிற்குத் தேவையான துணிச்சலான தலைமைத்தவத்தை கட்டியெழுப்புவதில் மாணவர்களை கௌரவிப்பது மிக முக்கியமான பணியாகும் என்றும், இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு வாழ்வதற்கு உகந்த ஒரு நாட்டை உருவாக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக முழு நாட்டையும் ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய தேசிய செயற்பாடொன்று ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
எந்தவொரு பிள்ளையையும் கைவிடாமல் ஒவ்வொரு பிள்ளையின் சமூகப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பாடுபடுவதாக தெரிவித்த அமைச்சர் , இதுவரை மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் 17,000 பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உட்பட அனைத்து மட்டங்களிலும் உள்ள குழந்தைகள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பொதுமக்களுக்கு நெருங்க முடியாத, சலுகை பெற்ற குழுவினருக்கு மட்டுமே பயனளித்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு நெருக்கமான மக்களின் நிறுவனமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து பெற்றோர்களும் தங்களால் அடைய முடியாத உலகத்தை தமது பிள்ளைகளுக்கு வென்று கொடுக்கும் கனவை நனவாக்க அரசாங்கம் அனைத்து சாத்தியமான தலையீடுகளையும் செய்ய உறுதிபூண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மபிரிய திசாநாயக்க, விஜேசிறி பஸ்நாயக்க, வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஜகத் குணவர்தன, குருநாகல் மாவட்ட செயலாளர், மாகாண கல்விச் செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் புலமைப்பரிசில் பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
