தோப்பூர் வாராந்த சந்தையில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதாக சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (03) செவ்வாய்க்கிழமை திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையின் போது, சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில மரக்கறிகள் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக இருந்தது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, இந்த வாரம் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் உள்ளிட்ட சில வகை மரக்கறிகள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டதுடன், சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தமையால், அவை சுகாதார வைத்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கசாலி அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட மரக்கறிகளை அழிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சுகாதார விதிமுறைகளை மீறி மரக்கறிகளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் இடம்பெறாத வகையில் கடுமையான கண்காணிப்புகள் தொடரும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நூர் முகம்மது கசாலி தெரிவித்தார்.
பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய, சந்தைகளில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த பரிசோதனையின் போது தோப்பூர் பிராந்திய சுகாதார பரிசோதகர் எம். எஸ். அபாப் அஹமட், மூதூர் உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி அஸ்ரா, மற்றும் முதூர் பிரதேச சபை தோப்பூர் உப அலுவலக அதிகாரி ஆர். ஐ. ஆஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
