கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இன்று (01) அதிகாலை தருமபுரம் பகுதியில் லொறி ஒன்று, வேகமாக பயணித்த நிலையில், அதனை வீதித் தடையில் நிறுத்தி பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர்.
எனினும் பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி அந்த லொறி பயணித்த நிலையில், அதன் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அந்த லொறியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-சப்தன்
