தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமையத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தத் தாழ்வு மண்டலம் நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது இன்றைய தினமே இலங்கைக்குள் நுழையும் என முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
