மீண்டும் மஹா ஓயாவில் குளிக்க செல்லும் பின்னவல யானைகள் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பின்னவல யானைகள் சரணாலய யானைகளை மஹா ஓயாவிற்கு குளிக்க அழைத்துச் செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயா பிரதேசத்தில் நீர் கலங்கலாக இருந்தமை, நீருடன் அடித்து வரப்பட்ட மணல் மற்றும் சகதி யானைகள் குளிப்பாட்டும் இடத்தில் படிந்திருந்தமை மற்றும் அந்த மணலுக்குள் யானைகளுக்கு அபாயகரமான கண்ணாடித் துண்டுகள் மற்றும் இரும்புத் துண்டுகள் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, யானைகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக மஹா ஓயாவிற்கு யானைகளை அழைத்துச் செல்வதைத் தற்காலிகமாக கட்டுப்படுத்த பின்னவல யானைகள் சரணாலய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடன், அகழ்வாராய்ச்சி இயந்திரத்தைப் (Excavator) பயன்படுத்தி மஹா ஓயா யானைகள் குளிப்பாட்டும் இடத்தில் படிந்திருந்த மணல் மற்றும் ஏனைய கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ததாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 24ஆம் திகதி முதல் வழமையான நேரங்களில் யானைகளை மஹா ஓயாவிற்கு குளிக்க அழைத்துச் செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
