இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,
உங்கள் நாடு ‘டித்வா’ புயலில் இருந்து மீண்டு வரும் நிலையில், இலங்கையின் நிவாரணம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து ஆராய்வதற்காக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை எனது விசேட பிரதிநிதியாக அனுப்புகிறேன்.
‘அயலவருக்கு முன்னுரிமை’ (Neighbourhood First)எனும் எங்கள் கொள்கை மற்றும் முதலில் பதிலளிப்பவராக (First Responder) இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் படி, திடீரென ஏற்பட்ட சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக ‘ சாகர் பந்து'(Operation Sagar Bandhu) நடவடிக்கையை நாம் ஆரம்பித்தோம். இந்திய கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் நிவாரணப் பொருட்களையும் அவசரமாகத் தேவையான பொருட்களையும் கொண்டு வந்தன.
அவர்கள் மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவியதோடு, அவசர மருத்துவ சேவைகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பு கட்டமைப்புகளை மீளமைக்கவும் இந்திய விசேட குழுக்கள் அனுப்பப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்ற ‘சாகர் பந்து’ நடவடிக்கை உதவியதோடு இது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் பரந்த மற்றும் ஆழமான வெளிப்பாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
இலங்கை தற்போது அடுத்த கட்டம் குறித்து கவனம் செலுத்தியுள்ள வேளையில், நம்பகமான பங்காளியாகவும் நம்பகமான நண்பராகவும் இந்தியா சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் அவர்களின் தாங்கிக் கொள்ளும் சக்தியை உறுதிப்படுத்துவதில் கடந்த காலத்தைப் போன்றே நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம்.
இந்த சூழலில், இந்தியா ஒரு விரிவான சலுகை பொதியை வழங்குகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.சலுகைப் பொதி எவ்வாறு சிறப்பாக செயல்படுத்தலாம் என்பது குறித்து உங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அறிவித்துள்ளோம்.
இலங்கை எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக எழுச்சி பெறும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பயணத்திலும், தேசிய அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திலும்,இந்தியா எப்போதும் இலங்கைக்கு நெருக்கமாக இருக்கும்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, எனது மேலான இந்த ஆதரவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர்
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
