யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி யாழ்ப்பாணம் வந்த குறித்த சிறுவன், நேற்றைய தினம் (20) குருநகர் – பாஷையூர் பகுதியில் பழைய வீடொன்றை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு, அது விழும் நிலையில் இருந்தமையால் தப்பிப்பதற்காக அறையின் உள்ளே ஓடியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் மற்றுமொரு சுவர் அவர் மீது சரிந்து விழுந்ததில், குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
-கஜிந்தன்
