நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தை என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் மீது மண்மேடு சரிந்ததாகவும், பிரதேசவாசிகளும் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளும் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தும் அது பலனளிக்கவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பிரதேசத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
