பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு முடிவு செய்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.
அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதே சமயம் பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கிடையே அவரை பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மனித குலத்திற்கு எதிரானது என இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் ‘நான் மீண்டும் வருவேன்’ என்ற ஓடியோவை ஷேக் ஹசீனா வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு ‘போராடியவர்கள் மீது கொடூர ஆயுத தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது மனித குலத்திற்கு எதிரான வன்முறை.
திட்டமிட்டு வன்முறைக்கு மூளையாக ஷேக் ஹசீனா செயல்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளார்..
