ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்கள் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துருக்கி இஸ்தான்புல் நகரை தலைமையகமாகக் கொண்டியங்கும் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றம் (Palestine International Forum for Media and Communication – Tawasol) 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதுடன், பலஸ்தீன மக்களின் குரலை உலக ஊடகங்களில் வலுப்படுத்துவது மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரியர்கள், ஊடக நிபுணர்கள் ஆகியோருக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய இலக்காகும்.
இம்மன்றம் வருடந்தோறும் நடத்தும் மாநாடுகள், பயிற்சிகள், ஊடக முன்முயற்சிகள் மற்றும் ஆய்வுகளின் மூலம் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கின்றது.
இலங்கையின் ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட என்.எம். அமீன் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன், இலங்கையில் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு நிறுவனமான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும் தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (SAFMA) இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.
நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் பணிகளில் முக்கிய பங்காற்றி வரும் அவர், ஒழுக்கநெறியுடன் கூடிய ஊடகப் பண்பாட்டை வளர்த்தெடுத்தல், ஊடக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தல் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பில் முன்னிற்பதற்காக பரவலாக பாராட்டப்பட்டுள்ளார்.
Tawasol மன்றத்தின் இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள என்.எம். அமீன் அவர்கள் இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் மன்றத்துக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதோடு, பலஸ்தீன விவகாரம் மற்றும் ஊடகத்துறை வளர்ச்சி தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.