முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று (30) அனுமதித்துள்ளது.
சந்தேகநபர் கம்பஹா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,ஒவ்வொரு சந்தேக நபரும் ரூ. 5 இலட்சம் ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 5 இலட்சம் 5 சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அத்துடன், சந்தேகநபர்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமெனவும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடிப் பிரிவில் முன்னிலையாக கையெழுத்திட வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்தக் கடுமையான நிபந்தனைகளின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தற்போது விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் போலி பத்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்க நிலத்தை விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மே 07ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.