ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா (Marcelo Rebelo de Sousa) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி (24) பிற்பகல் நடைபெற்றன.
போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசாவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அன்புடன் வரவேற்றதுடன், இரு தலைவர்களுக்கும் இடையிலான சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இருதரப்பு கலந்துரையாடல்கள் தொடங்கின.
அதன்போது, இலங்கைக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை உறவுகளை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு