உள்நாடுபிராந்தியம்

திருடன் என நினைத்து தவறாக தாக்கப்பட்ட நபர் – சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் உயிர்மாய்ப்பு

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார்.

உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.

இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார்.

முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

தேர்தல் பிரச்சனைகளுக்கு விசேட பிரிவு மற்றும் தொலைபேசி இலக்கம்

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்